சிறுத்தைப் புலியைப் பார்த்து புயலாய் ஓட்டம் பிடித்த மக்கள்…

First Published Dec 22, 2016, 10:50 AM IST
Highlights


வால்பாறை,

வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த சிறுத்தைப் புலியைப் பார்த்து மக்கள் புயலாய் ஓட்டம் பிடித்தனர்.

வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சிறுத்தைப் புலியின் நடமாட்டம் வால்பாறை நகர் பகுதியில் அதிகமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளிலும், வால்பாறை – பொள்ளாச்சி பிரதானசாலை பகுதிகளிலும் சிறுத்தைப்புலிகள் சுற்றித் திரிகின்றன. இவை, ஆடு மற்றும் மாடுகளை கடித்துக் கொன்று விடுகிறது.

தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் தொழிலாளர்கள் சிறுத்தைப் புலியை நேரில் பார்த்து மிரண்டுள்ளனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.45 மணிக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள உயர்மின் அழுத்த கோபுரம் அருகே சிறுத்தைப்புலி ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த எஸ்டேட் பகுதி மக்கள் அனைவரும் பகல் நேரத்திலேயே சிறுத்தைப்புலி குடியிருப்புக்கு அருகே படுத்து கொண்டிருப்பதை பார்த்து புயலாய் ஓட்டம் பிடித்தனர்.

சிலர் தைரியமாக வீடுகளை விட்டு வெளியே வந்து, மறைவான இடத்தில் பாதுகாப்பாக நின்றுக் கொண்டு சிறுத்தைப் புலியைப் பார்த்து மகிழ்ந்தனர். சிறுத்தைப் புலிக்குத் தெரியாமல் புகைப்படமும் எடுத்தனர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு, அமைதியை உடைத்து, சிறுத்தைப்புலி தேயிலைத் தோட்டம் வழியாக குதித்து ஓடி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

சிறுத்தைப்புலி குறித்து வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து எஸ்டேட் பகுதிகளிலும், வால்பாறை நகர் பகுதியிலும் வால்பாறை வனச்சரக வனத்துறையினரும், மனித – வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“வால்பாறை நகர் பகுதி பொதுமக்களும், எஸ்டேட் பகுதி மக்களும் அன்றாடம் சிறுத்தைப் புலிகள் நடமாடி வரும் இடங்களில் வனத்துறையினர் கூண்டுகள் வைத்து சிறுத்தைப்புலிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் கொண்டு போய் விடவேண்டும்” என்று கோரிக்கையை வைத்துள்ளனர்.

click me!