வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராமங்கள்; ஆனால், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை - உண்மையை போட்டுடைக்கும் அன்புமணி...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 21, 2018, 12:40 PM IST
Highlights

பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் விவசாயப் பாசனத்திற்குத் தேவையானத் தண்ணீரை தமிழக அரசு இதுவரை திறந்துவிடவில்லை. இதற்கு பெட்ரோலிய மண்டலம் திட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசு இருப்பதே காரணம் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
 

நாகப்பட்டினம் 

தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாக கொள்ளிடம் ஆறு பாய்கிறது. இவ்வாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம் அருகேவுள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. 

அங்கு வசித்துவந்த பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அருகிலுள்ள பள்ளிக் கூடங்கள், சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெள்ளம் புகுந்த கிராமங்களைப் பார்வையிட்டார். அதன்ப்படி, நாதல்படுகை, முதலைமேடுத்திட்டு போன்ற கிராமங்களைப் பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் கூறினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், "கொள்ளிடம் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் சரியாக கிடைக்கவில்லை.

வருடா வருடம் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தற்போது விநாடிக்கு இரண்டரை இலட்சம் கன அடி தண்ணீர்  கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடலில் வீணாகக் கலக்கிறது. 

பாசனத்திற்கோ, வாய்க்கால்கள், குளங்களுக்கோ தண்ணீர் கிடைக்காத நிலையில் கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமிக்க கொள்ளிடம் ஆற்றில் திருச்சி முக்கொம்பில் இருந்து பத்து கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்டவேண்டும்.

கொள்ளிடம் ஆறு சமவெளிப் பகுதி என்பதால் தடுப்பணையைக் கட்ட முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். இந்தக் கருத்து நான் ஏற்றுக் கொள்ளவில்லை.  

ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் பழனிசாமியின் கருத்து ஜெயலலிதாவின் கருத்துக்கு முரணாக உள்ளதை அறியலாம்.

பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் விவசாயப் பாசனத்திற்குத் தேவையானத் தண்ணீரை தமிழக அரசு இதுவரை திறந்துவிடவில்லை. இதற்கு பெட்ரோலிய மண்டலம் திட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசு இருப்பதே காரணம் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

 

click me!