
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் மறக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களின் குடும்பத்துக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
இதேபோல் அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதே வேளையில் சம்பவம் நடந்தவுடன் தவெக தலைவர் விஜய் தனி விமானத்தில் சென்னை சென்றார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் பார்க்காததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதே வேளையில் எக்ஸ் தளத்தில் இந்த சம்பவம் குறித்து உருக்கமாக பதிவிட்ட விஜய், ''இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்'' என்று கூறியதுடன் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
விஜய் ஒரு சொட்டு தண்ணீர் குடிக்கல
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு விஜய் மிகவும் மனமுடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் தனியாக அமர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக TVK Head Ofiice என்ற ரசிகர்களின் பேஸ்புக் பக்கத்தில், ''அண்ணன் நேற்று மதியம் சாப்பிட்டதோடு….. இந்த நொடி வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கல'' என்று உருக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
யாரிடமும் பேசவில்லை
''இந்த சூழ்நிலையில் விஜய்க்கு ஆதரவாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி'' எனவும் அவரது ரசிகர்கள், தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ''யாரிடமும் அண்ணா பேசவில்லை… தனியாக தான் இருக்கார். அவர் உடல் நிலை நினைத்து கவலையாக இருக்கு'' என்றும் ரசிகர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.
குற்ற உணர்ச்சியுடன் விஜய்
விஜய்யை பொறுத்தவரை நம்முடைய கூட்டத்தில் இப்படி ஒரு சோக சம்பவம் நடந்து விட்டதே என்று சோகத்தில் மூழ்கி இருக்கிறாராம். மேலும் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் எப்படி வெளியே வருவது? எந்த முகத்தில் தவெக தொண்டர்களை சந்திப்பது? என்ற குற்ற உணர்ச்சியுடன் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் இந்த வலியில் இருந்து விரைவில் மீண்டு வருவார் என தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.