
விழுப்புரம்
25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் பதவி உயர்வு பெறாததால் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று கால்நடை மருத்துவர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாமல் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
அதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் கால்நடை மருத்துவர்கள் 113 பேர் நேற்று பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இவர்கள் அனைவரும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகியவை சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.
உதவி மருத்துவர் சங்க மாவட்டச் செயலாளர் கந்தசாமி, மருத்துவ அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜாசிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட இணைச் செயலாளர் செல்வம், கோட்ட செயலாளர்கள் மணிமாறன், நரேந்திரன், யுவராஜ், கோபி, மகளிர் பிரிவு செயலாளர் சகுந்தலா உள்பட பலர் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியர் சுப்பிரமணியனை சந்தித்து, கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.