
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதனை ஜூன் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக கூறி 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மதன் தலைமறைவான மதனை போலீசார் திருப்பூரில் பங்களா ஒன்றில் பாதாள அறையில் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மதன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் தற்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஈடுபட்டதாக மதன் மீது குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துரையினர் கடந்த 2 நாட்களாக மதனை விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் தான் வசூலித்த பணத்தை எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டதாக மதன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அமலாக்கத்துரையினர் மதனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மதன் சென்னை ராயபுரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து புழல் சிறைக்கு மதன் அழைத்து செல்லப்பட்டார் மதன்.