
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.84.27 கோடி மோசடி செய்த வேந்தர் மூவிஸ் மதனை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துரையினர் கைது செய்தனர்.
‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக கூறி 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மதன் தலைமறைவானார். அதிர்ச்சியடைந்த பணம் கொடுத்தவர்கள் அமலாக்கத்துரையிடம் சென்று மனு கொடுத்தனர்.
இதனிடையே பண மோசடியில் மதனுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரும் கைது செய்யப்பட்டார்.
பச்சமுத்துவின் தகவலின் அடிப்படையில் மதனை உடனடியாக கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து திருப்பூரில் பங்களா ஒன்றில் பாதாள அறையில் பதுங்கியிருந்த மதனை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மதனின் ஜாமீன் மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் 10 கோடி ரூபாய் உத்தரவாத தொகை செலுத்த வேண்டும் என்றும் செங்கல்பட்டில் தங்கிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஈடுபட்டதாக மதன் மீது குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துரையினர் கடந்த 2 நாட்களாக மதனை விசாரணை செய்து வந்தனர்.
இந்த விசாரணையில் தான் வசூலித்த பணத்தை எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டதாக மதன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அமலாக்கத்துரையினர் மதனை கைது செய்துள்ளனர்.