தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து மதுரையில் வருகிற 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
மதுரை அருகே திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருமோகூர் மந்தை திடலில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சிலர் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தலித் மக்கள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்த சிலர், வீடுகளின் கதவு, ஜன்னல்கள் மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தினர். விசிக கொடிக்கம்பம், திருமாவளவன் பேனர் உள்ளிட்டவைகள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த, ஒத்தக்கடை போலீஸார் 24 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை புறநகர் பகுதிகளில் நடைபெற்ற வன்கொடுமை நிகழ்வுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதில் தயங்குகின்றனர். இது தலித் மக்களுக்கு காவல்துறையினர் செய்த அநீதி. காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு புனைவதை தடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமோகூர் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக விசிக தலைவர் திருமாவளவன் இன்று மதுரை வந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “ திருமோகூரில் கோயில் திருவிழாவில் சாதி வெறியால் சிலர் திட்டமிட்டு பட்டியலின மக்களின் குடியுரிப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்திலும் முறையான நடவடிக்கை இல்லை. இந்த சம்பவத்தில் யாரையும் கைது செய்யவில்லை. இவற்றில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும். இது போன்ற சம்பவங்களில் தலித்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவதை கைவிட வேண்டும்.” என வலியுறுத்தினார்.
மதுரை புறநகர் பகுதிகளில் நடைபெற்ற வன்கொடுமை நிகழ்வுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்வதில் தயங்குகின்றனர். இது தலித் மக்களுக்கு காவல்துறையினர் செய்த அநீதி ஆகும், காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு புனைவதை தடுக்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
தேனி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு உள்ளார். மதுரை சுற்றுப்பகுதிகளில் சில மாதமாகவே 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாதிய மோதல்கள் நடந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து மதுரையில் வருகிற 12ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.