வசிஷ்ட நதி பாறைகளை உடைத்து வெளிநாட்டினர் ஆய்வு; இப்போ என்ன திட்டமோ? மக்கள் அதிர்ச்சி...

First Published Mar 16, 2018, 7:06 AM IST
Highlights
Vasishta river rocks breaked by foreigners What is the plan now? People shocked ...


சேலம் 

ஆத்தூர் பகுதியில் உள்ள பாறைகளை உரிய உரிமம் இல்லாமல் உடைத்து வெளிநாட்டு குழுவினர் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போ எந்த திட்டத்திற்காக இப்படி நடக்குது என்று தெரியாமல் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் சென்டர் ஒன்று உள்ளது. இதன் நிர்வாகியாக சஜ்ஜியு கிருஷ்ணா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இருக்கிறார். 

இவர் தலைமையில் சீன நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் மற்றும் ஐந்து கேரள மாநில மாணவர்கள் ஒரு குழுவாக நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு வந்தனர்.

வெளிநாட்டினர் இடம் பெற்றிருந்த இந்தக் குழுவினர் ஆத்தூர் முல்லைவாடி வசிஷ்ட நதி பகுதியில் உள்ள பாறைகளை உடைத்து ஆய்வு செய்தனர். இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அந்தக் குழுவினர் குறித்து ஆத்தூர் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

பின்னர், அந்த குழுவினரை மக்கள் ஆத்தூர் நகரசபை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அந்த குழுவினரிடம் விசாரணை மேற்கொண்ட நகரசபை ஆணையாளர் கண்ணன் ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். 

பின்னர் இதுகுறித்து மேல் விசாரணைக்கு ஆத்தூர் உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு அந்த குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில், "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த குழுவினர் பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதும், ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன்மலை, பச்சமலை பகுதிகளில் இதுகுறித்து ஆய்வு செய்துவிட்டு ஆத்தூர் பகுதிக்கு ஆய்வுக்கு வந்ததும்" தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து உரிய அனுமதி பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி அந்த குழுவினர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 

வெளிநாட்டினர் வந்து ஆத்தூர் முல்லைவாடி வசிஷ்ட நதி பகுதியில் உள்ள பாறைகளை உடைத்து ஆய்வு செய்துள்ள சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

click me!