குரங்கணி தீ விபத்து மேலும் 2 பேர் சாவு…. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!

First Published Mar 16, 2018, 6:41 AM IST
Highlights
Kurangani fire accident death roll incresed


குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் சென்னையைச் சேர்ந்த ஆசிரியை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம்  ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்த சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 36 பேர் சிக்கித் தவித்தனர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் காட்டுத்தீயில் கருகி இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்..

அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் இறந்து போனார்கள். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிரி என்பவரின் மகன் கண்ணன்  நேற்று உயிரிழந்தவர்களில்  ஒருவர். கண்ணணுக்கு  இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் 70 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக் கப்பட்டு இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனின் தந்தை கிரி இறந்துவிட்டார். தாயார் வசந்தா வீட்டு வாசலில் டீக்கடை நடத்தி, மகனை படிக்க வைத்தார்.

கண்ணன், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தார். 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

காட்டுத்தீ சூழ்ந்தபோது, கண்ணன் தப்பி வெளியேறி விட்டார். ஆனால் தன்னுடன் வந்த நண்பர்களான விவேக்-திவ்யா தம்பதியர், தமிழ்ச்செல்வன் ஆகியோரை காப்பாற்றுவதற்காக மீண்டும் மலைப்பகுதிக்குள் சென்ற போது நெருப்பில் சிக்கி காயம் அடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்து விட்டார்.

கண்ணன் இறந்த சிறிது நேரத்தில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த அனுவித்யாவும் உயிர் இழந்தார்.இவர் சென்னை சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த முத்துமாலை என்ற தொழில் அதிபரின் மகள்.

இவர்களுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிறுதொண்டநல்லூர் எம்.எஸ்சி. சைக்காலஜி படித்துள்ள அனுவித்யா, மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

click me!