சென்னையை பந்தாடிய வர்தா புயல்….10 பேர் பலி….3384 மரங்கள்…3400 மின் கம்பங்கள் சாய்ந்தன…

First Published Dec 13, 2016, 9:03 AM IST
Highlights


சென்னையை பந்தாடிய வர்தா புயல்….10 பேர் பலி….3384 மரங்கள்…3400 மின் கம்பங்கள் சாய்ந்தன…

வங்கக்கடலில் உருவான  வர்தா புயல் சென்னை துறைமுகம் அருகே நேற்று பிற்பகல்  2.30 மணி அளவில்  கரையை கடந்தது. கோர தாண்டவம் ஆடிய இந்த வர்தா புயல் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது. தொடர்ந்து கனமழையும்  பெய்தது.

இந்த புயலால் சாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் இணைப்புகள்  துண்டிக்கப்பட்டன.  பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

சென்னை முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மரங்கள் சாய்ந்து விழுந்தன.. நகரத்தின் அனைத்து சாலைகளிலும் மரக்கிளைகள் சாய்ந்து கிடக்கின்றன. 3 ஆயிரத்துக்கும் அதிகமான மின் கம்பங்களும் சாய்ந்தன.

நகரின் பல்வேறு பகுதிகள் முற்றிலும் இருளில் மூழ்கிக் கடந்தன.ஏராளமான கடைகள் மற்றும் குடிசை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. பல இடங்களில் சாலைகளில் சென்று கொடிருந்த வாகனங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன.

அடையாறு,கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன.

வர்தா புயல் மழையால் பாதிக்கப்பட்ட  சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 296 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 97 மையங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான  உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தி வருகின்றனர். சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 2 தேசிய  பேரிடர் மீட்புப் படைகளும்,, திருவள்ளூரில் 3 படைகளும், சென்னையில் ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படையும் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட புயல் தாக்கிய மாவட்டங்களில் இருந்து இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்  மீட்கப்பட்டுள்ளனர்

இதுவரை புயல் மழைக்கு 10  பரிதாபமாக உயிரிழந்தனர்.ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். தமிழக அரசு தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

click me!