
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பி. மூர்த்தியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சௌராஷ்டிராபுரம் மற்றும் வந்தியூர் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க முயலும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்புச் சட்டை அணிந்து வந்த அவர், பிரசாரக் களத்திலேயே மசோதா நகலை எரித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். தனது உரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை "பாஜகவின் முரட்டு அடிமை" என்று கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் நலன்களை அடகு வைத்த அடிமைக் கூட்டமும், மதவாதச் சங்கிக் கூட்டமும் இந்தத் தேர்தலில் மக்கள் சக்தியால் முற்றிலுமாகக் காணாமல் போவார்கள் என்று ஆவேசமாகத் தெரிவித்தார். உரிமைகளை மீட்டெடுக்கவும், அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திமுகவிற்கு வாக்களிக்குமாறு அவர் மதுரையில் முழங்கினார்.