
ராசிபுரம்,
பணியின்போது இறந்த தந்தையின் பணியை கேட்டுச்சென்ற மகனை, காவலாளர்கள் ஜன்னல் கம்பியில் வைத்து அடித்துள்ளனர். அடிப்பட்டவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (28). இவரது தந்தை ஜெயக்குமார் கடந்த 2005–ம் ஆண்டு சங்ககிரியில் காவல் ஏட்டுவாக பணி புரிந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனிடையே தந்தை இறந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் வேலை கிடைக்காததால் மன வேதனை அடைந்த முத்துசாமி வாரிசு வேலை கேட்டு சேலம் மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திங்கள்கிழமைச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் வாரிசு வேலை கேட்டுச் சென்ற தன்னை காவலாளர்கள் ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து அடித்ததாக கூறி முத்துசாமி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தகாத வார்த்தையால் திட்டி தனது தாயார் ஆனந்தலட்சுமியையும் காவலாளர்கள் தாக்கியதாக முத்துசாமி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் முத்துசாமி சேலத்தில் உள்ள மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் தகராறு செய்த போது அங்கு 2 காவலாளர்களின் கையை கடித்ததது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.