
வேலூர்
பெங்களூரில் இருந்து வேலூர் வந்த இரயிலில் சாராயம் கடத்திய இருவரை இரயில்வே காவலாளர்கள் கைது செய்து அவர்கள் வைத்திருந்த சாராயங்களையும் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி இரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கண்ணையா தலைமையில் காவலாளர்கள் நேற்று அதிகாலை ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, பெங்களூருவில் இருந்து இரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய இருவர் கையில் பெரிய பை ஒன்றை வைத்திருந்தனர். காவலாளர்களுக்கு சந்தேகம் எழவே அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
சோதனையில், அந்த பையில் பெங்களூருவில் இருந்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாராயங்கள் கொண்டுவந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், அவர்கள் இருவரும் காட்பாடி அக்ராவரத்தைச் சேர்ந்த குமார் (48), நேசகுமார் (49) என்பதும், விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த சாராயங்களை பறிமுதல் செய்த இரயில்வே காவலாளர்கள், அவர்கள் இருவரையும் மதுவிலக்கு அமல்பிரிவு காவலர்களிடம் ஒப்படைத்தனர்.