
மாநில அரசின் கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவில் புதிதாக இரண்டு பேரை உறுப்பினர்களாக நியமினம் செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக தமிழ்நாட்டிற்கு தனியாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
பொது தேர்வில் குறைந்த மதிப்பெண்; அம்மாவுக்கு கடிதம் எழுதிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவில் மாநில கல்விக் கொள்கை தயாரிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த ஜவகர்நேசன் அண்மையில் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அதனால் மாநில கல்விக் கொள்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு புதியவரை நியமிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தற்போது, பள்ளிக்கல்வித்துறை அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் உயர்மட்டக் குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். ஃப்ரீடா ஞானராணி மற்றும் பழனி ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஃப்ரீடா ஞானராணி காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் ஆவார். பழனி சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவராக இருப்பவர். இவர்கள் இருவரும் மாநில அரசு கல்விக் கொள்கை குழுவில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
மாநில கல்விக் கொள்கை குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் 4 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநில கல்விக் கொள்கை குழு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.