நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மாறி மாறி அரிவாளால் வெட்டிக் கொண்டனர். புகாரின்பேரில் 14 பேரை கைது செய்த காவலாளர்கள் தலைமறைவான 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, பெரம்பூர் காவல் சரகம் சேத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கலியன் (70). இதே பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சேதுராமன் (32).
இந்தப் பகுதியில் கன்னிகா பரமேஸ்வரி கோயில் ஒன்று உள்ளது. இதற்கு கும்பாபிஷேக விழா நடத்தியபோது கல்வெட்டில் பெயர் சேர்த்தது கலியன் மற்றும் சேதுராமன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உண்டானது.
இந்த நிலையில் கலியன் தனது மனைவி ராணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சேதுராமன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சிலர் உருட்டுக் கட்டையால் கலியனையும் அவரது மனைவியையும் தாக்கி அரிவாளால் வெட்டினர். இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த கலியன் தரப்பை சேர்ந்த சிலர், சேதுராமனையும், அவருடைய மனைவி புவனேஸ்வரியையும் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் பழி தீர்த்து கொண்டனர். இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இவ்விரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயம் அடைந்த நால்வரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவை தொடர்பாக கலியன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர்.
மேலும், சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (38), கணேஷ்குமார் (46), மாதவன் (30), தினேஷ்குமார் (23), ரவி (51), வீரபாண்டியன் (40), தாஸ் (30), சேதுராமன் (32) ஆகிய எட்டு பேரை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக மாரியப்பன், பரமானந்தன், புவனேஸ்வரி ஆகிய மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று சேதுராமன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் குணசேகரன் (34), சுந்தர் (30), கோபி (34), ராஜேந்திரன் (59), இளையராஜா (38), மகேந்திரன் (23) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக வரதராஜன், மணிகண்டன், சிற்றரசன், கலியன், ராணி ஆகிய ஐவரை பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோதத்தால் இரு தரப்பினர் மாறி மாறி வெட்டிக் கொண்டு சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.