
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது இல்லத்தில் பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.
தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.