பாஜகவுடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சரத்குமார் பேச்சுவார்த்தை: யாருக்கு எத்தனை தொகுதி?

By Manikanda PrabuFirst Published Mar 11, 2024, 2:33 PM IST
Highlights

பாஜகவுடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சரத்குமார் ஆகியோர் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடவுள்ளது. இதனிடையே, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதும், வேட்பாளர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

அதேசமயம், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், கூட்டணியில் இணைய அதிமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டது. எனவே, எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் அந்த இரு கட்சிகளும் தங்களது தலைமையில் தனித்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது.

Latest Videos

பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி.சண்முகதின் புதிய நீதிக்கட்சி, பச்சமுத்துவின் ஐ.ஜே.கே., ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளான. இந்த இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையை இறுதி செய்து விட்டால் தெளிவான படம் கிடைத்து விடும்.

அதேசமயம், ஓ,பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் அமமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளது. இந்த தகவலை இருவருமே உறுதிப்படுத்தியுள்ளனர். சசிகலாவும் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில், ஓபிஎஸ், டிடிவி, சரத்குமார் ஆகியோர் பாஜகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ், டிடிவி ஆகிய இருவரையும் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஆனால், அமமுகவின் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துள்ளார். 

அதேபோல், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால், எந்த சின்னத்தில் அவரது அணியினர் களம் காண்வார்கள் என்பது தெரியவில்லை. பாஜக அல்லது அமமுக இரண்டில் ஏதேனும் ஒரு கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவு தான் அவரின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் என்கிறார்கள். ஆனால், தனி சின்னத்தில் போட்டியிடவே ஓபிஎஸ் விரும்புவதாகவே தெரிகிறது.

தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா ரத்து: திமுக அரசு மீது அண்ணாமலை மீண்டும் குற்றச்சாட்டு!

டிடிவி தினகரனை பொறுத்தவை 22 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை கொடுத்து ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தென் சென்னை, வேலூர், நீலகிரி, நாகப்பட்டிணம், விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய 10 தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், தேனி, ஸ்ரீபெரும்புதூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், வட சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை ஆகிய 10 தொகுதிகளை ஓபிஎஸும் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இருவருக்கும் சேர்த்தே 10 தொகுதிகளை ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தெரிகிறது. 10 தொகுதிகளை ஒதுக்கி டிடிவி, ஓபிஎஸ் ஆகிய இருவரும் தலா 5 தொகுதிகளை பிரித்துக் கொள்ளுமாறு பாஜக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இரு தொகுதிகளை சரத்குமார் கேட்பதாக தெரிகிறது. ஆனால், ஒரே ஒரு தொகுதியை மட்டுமே அவருக்கு ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில், திருநெல்வேலி தொகுதி சரத்குமாருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

click me!