
திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் படுகொலை அரங்கேறியுள்ளது. அதாவது பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான தாமரைச் செல்வன் இரு சக்கர ஊர்தியில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த 5 பேர் தங்களின் வாகனத்தை தாமரைச் செல்வனின் வாகனம் மீது மோதி கீழே தள்ளியுள்ளனர்.
பின்பு அந்த கும்பல் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் வாழும் பகுதியிலேயே படுகொலை நடந்துள்ளது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் கொலைகள் நடப்பது பேஷனாகி விட்டது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள நயினார், ''திருச்சி பீமாநகரில் உள்ள காவலர் குடியிருப்பிற்குள்ளேயே ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற உண்மையை நெற்றியில் அடித்தாற்போல நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளது.
குற்றவாளிகளுக்கு குளிர் விட்டு விட்டது
கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், பட்டப்பகலில் காவல்நிலையங்களின் அருகிலும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயும் ஒருவரை வெட்டிச் சாய்ப்பது பேஷனாகிவிட்டது. காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட குற்றவாளிகளுக்கு சுத்தமாகக் குளிர்விட்டுப் போய்விட்டது.
ஆணவம் சகித்துக் கொள்ள முடியாதது
காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை இத்துப் போய்விட்டது. இது நமது சமூக அழிவிற்கான அறிகுறி. தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு இப்படி சீரழிந்து கிடக்கையில் முழுநேர காவல்துறை தலைமை இயக்குனரை இன்னும் நியமிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஆளும் அரசின் ஆணவம் சகித்துக் கொள்ள முடியாதது. பொதுமக்களின் உயிர்களை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் இந்தத் தீயசக்தி திமுக அரசு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய கள்ளிச்செடி'' என்று கூறியுள்ளார்.