
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை நாளை சட்டசபையில் நடைபெற உள்ள போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக அனைத்து பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“ஆயுள்காப்பீடு, வைப்புத்தொகை உள்ளிட்டவைகள் மூலம் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை மீண்டும் தொழிலாளர்களுக்கே வழங்க வேண்டும்,
50 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,
ஓய்வூதியர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்,
13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை நாளை (சனிக்கிழமை) சட்டசபையில் நடைபெற உள்ள போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் வாலிபால் மணி தலைமை வகித்தார்.
இதில் தொ.மு.ச. அமைப்புச் செயலாளர் வேலு, நிர்வாக பணியாளர் முன்னேற்றச் சங்க துணைச் செயலாளர் அரிகரன், அமைப்புச் செயலாளர் எட்வின் அமல்ராஜ், சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் மூர்த்தி, மறுமலர்ச்சி தொழிற்சங்க இணை செயலாளர் ரவி உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களாஈ எழுப்பினர்.
இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1, 2, 3 மற்றும் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம் ஆகிய பணிமனைகளிலும் நேற்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.