
500 மற்றும் 1000 ரூபாயை சில்லறையாக மாற்றுவதில் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதையொட்டி சுங்கச்சாவடிகளில் சில்லறை இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து வரும் 18ம் தேதி வரை சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பணப்புழக்கமும் அதிவேகத்தில் குறைந்து உள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் கடந்த 10ம் தேதி முதல் வங்கிகளில் தவமாய் தவமிருக்கிறார்கள். இதில் கிராமப்புற மக்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருக்கும் 2.5 லட்சம் பண வினியோக மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு அதிக அளவிலான பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூல் செய்ய முடியாமலும், அவர்களுக்கு சில்லரை கொடுக்க முடியாமலும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிப்பதை கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் இந்த கால அவகாசம் நேற்று வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. அதன்படி இந்த அவகாசத்தை 18ம் வரை மத்திய அரசு நீடித்து உள்ளது. எனவே அதுவரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 18ம் தேதி நள்ளிரவு வரை கட்டண வசூல் இல்லை எனவும், இது தொடர்பாக அனைத்து வசூல் நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.