
பழைய 500, 1000 ரூபாய் நோட்டில் பஸ், ரயில் டிக்கெட் வாங்கவும், வாகனங்களுக்கு பெட்ரோல் போடவும் பயன்படுத்தி கொள்ள 24ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பணப்புழக்கமும் அதிவேகத்தில் குறைந்து உள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் கடந்த 10ம் தேதி முதல் வங்கிகளில் தவமாய் தவமிருக்கிறார்கள்.
அதே நேரத்தில், ஏடிஎம் மெஷின்கள் செயல்படாததாலும், திறந்து இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் விரைவில் பணம் தீர்ந்து விடுவதாலும் போதிய பணம் எடுக்க முடியாமல், அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் இயல்பு நிலை முற்றிலுமாக மோசமாகிவிட்டது. இந்த இன்னல்களை போக்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை, நிதி, நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் பொதுமக்களின் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், போதிய பணம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், யாரும் எவ்வித பதற்றமும் அடைய தேவை இல்லை. ரிசர்வ் வங்கியில் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது. மக்களுக்கு பணம் கிடைப்பதற்கான வழிகள் மேலும் அதிகரிக்கப்படும்.
அரசு அறிவித்த செலவினங்களுக்கு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு நேற்று முடிவடைவதாக இருந்தது. இந்த காலக்கெடு 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரிகள், கட்டணம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த நோட்டுகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
குறிப்பாக அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவு கடைகள் (அடையாள அட்டையுடன்), தகன மேடை ஆகியவற்றில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வரும் 24ம் தேதி வரை பயன்படுத்தலாம்.
மேலும் ரயில் டிக்கெட், மெட்ரோ ரயில் டிக்கெட், பொது போக்குவரத்து, விமான டிக்கெட் எடுக்கவும், மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்தவும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வாங்கவும், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பெறவும் இந்த நோட்டுகளை பயன்படுத்தலாம். அறிவித்து, பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.