பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசலில் வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நூற்றுக்கணக்கானோர் வரிசையில் இன்று காலை நின்றிருந்தனர்.
அப்போது, பீளமேடு பகுதியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற ஒரு கார், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், அந்த கார், கூட்டத்தில் இருந்தவர்கள் மீது மோதியது. இதில் கர்ப்பிணி பெண், 2 குழந்தைகள் உள்பட 10க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.