
திருச்சி
இன்று ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மனித எலும்பு தின்னும் போராட்டம் நடத்தப்படும் என்றும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்பர் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு அறிவித்துள்ளார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு நேற்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியது: "விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
விவசாயத்திற்கான உற்பத்தி செலவை விட 50 சதவீதம் லாபம் கிடைக்கும் அளவில் விளை பொருட்களுக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
நவம்பர் மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற கூட்டத்தின்போது பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதற்காக டெல்லி சென்றோம். ஆனால் பாராளுமன்ற கூட்டத்தையே தள்ளி வைத்து விட்டனர்.
போராட்டம் நடத்திய விவசாயிகளை பார்க்க கூட பிரதமர் மோடி வரவில்லை. எனவே, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மனித எலும்பு தின்னும் போராட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.