ஐபோன் தயாரிப்பதே தமிழ் பெண்கள் தான்! மகளிர் மாநாட்டில் பாஜக-வைச் சீண்டிய முதல்வர் ஸ்டாலின்!

Published : Dec 29, 2025, 07:18 PM IST
MK Stalin

சுருக்கம்

திருப்பூர் காரணம்பேட்டையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் ஐபோன் தயாரிப்பது முதல் உள்ளாட்சியில் அதிகாரம் பெறுவது வரை அடைந்துள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பான உரையை ஆற்றினார். இந்த மாநாட்டின் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இந்த மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக-வின் முக்கியத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். லட்சக்கணக்கான பெண்கள் இந்தப் பேரணியிலும் மாநாட்டிலும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஐபோன் தயாரிக்கும் பெண்கள்

மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: "திமுக-வின் ஒவ்வொரு தேர்தலிலும் 'தேர்தல் அறிக்கை' தான் உண்மையான ஹீரோவாக இருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி அவர்கள் தயாரித்த அறிக்கை 100% வெற்றியைத் தந்தது. அதேபோல, இந்த முறையும் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் மிகப்பெரிய வெற்றியைத் தரும்," என்றார்.

"பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் பெண்களுக்குச் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் இருக்கும் தமிழ்நாட்டில், உலகமே வியக்கும் ஐபோனை (iPhone) தயாரிப்பதே நம்மூர் பெண்கள் தான். இதுதான் திராவிட மாடலுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பெரியார் சொன்ன பதில்

" ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் என பெரியாரிடம் கேட்கப்பட்டது; குடும்பத்தில் உள்ள பெண்கள் முன்னேறினால் ஆண்களின் சுமை குறையும் என்று அவர் பதில் சொன்னார்; அதுதான் என் பதிலும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை முதன்முதலில் கருணாநிதி தான் கொண்டு வந்தார். அதன் விளைவாக, இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மேயர்களாகவும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகவும் அதிகாரத்தில் உள்ளனர். விடியல் பயணத் திட்டத்தால் பெண்கள் பயணம் செய்வது பெரிய அளவில் அதிகரித்துள்ளது; நிறைய வாய்ப்புகளை தேடிப்போய் முன்னேறுகின்றனர்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை கிடையதா?
UPSC Free Coaching: ரூ.9,000 ஊக்கத்தொகையுடன்.. யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!