திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இடி, மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வட கிழக்கு பருவமழை இன்னும் தொடங்காவிட்டாலும் வெப்பச் சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் மழை பெய்தது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் ராஜாபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது ராஜாபாளையத்தில் உள்ள வயல்வெளியில் பெண்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கி மகேஸ்வரி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. அப்போது உத்திரமேரூரை அடுத்த வயலக்காவூரில் மின்னல் தாக்கி பார்வதி என்ற பெண் உயிரிழந்தார். அவருடன் சென்ற அனிதா என்பவரது கண் பார்வை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை வரும் 20-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளது என்றும், அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
அக்டோபர் 23ம் தேதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.