
திருப்பூர்
திருப்பூரில் ராஜா காலத்து தங்க காசுகளை குறைந்த விலையில் தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த தங்க காசை பறிமுதல் செய்த காவலாளர்கள், அந்த காசுகள் ஒரிஜினல் என்று உறுதி செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் கோகுல்(29). இவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், “ தங்களிடம் ராஜா காலத்து புதையலில் கிடைத்த தங்க காசுகள் இருக்கிறது. அதனைக் குறைந்த விலைக்கு தருகிறோம். பணத்துடன் காங்கேயம் வந்தால் மேற்கொண்டு பேசலாம்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பேசியது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் குறைந்த விலைக்கு தங்க காசுகள் கிடைத்தால் யோகம்தான் என்று பணத்துடன் கோகுல் ஒரு காரில் நேற்று முன்தினம் புறப்பட்டுள்ளார்.
காரில் தனது நண்பர்கள் சிலரையும் உடன் அழைத்து வந்துள்ளார். காரில் வரும்போதே அந்த மர்ம நபர்களை செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட கோகுல், எங்கு வர வேண்டும் என்றதற்கு காங்கேயம் அருகே முத்தூர் சாலையில் வருமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து கோகுல் அவர்கள் கூறிய இடத்திற்கு நண்பர்களுடன் சென்றார். அப்போது அங்கு ஒரு காரில் மூன்று ஆசாமிகள் காத்திருந்தனர். அவர்கள் கோகுலிடம், “தாங்கள் வைத்திருக்கும் தங்க காசுகள் ராஜா காலத்தில் புதையலில் கிடைத்த தங்க காசு என்றும், இது போல் காசு வேண்டும் என்றால் முதலில் ரூ.50 ஆயிரம் தாருங்கள், அதன்பின்னர் எங்களிடம் உள்ள தங்க காசுகளை தருகிறோம்“ என்று கூறியுள்ளனர்.
இதனிடையில் அந்த மர்ம நபர்கள் வந்த காரின் பின்பகுதியில் உள்ள நம்பர் பிளேட்டில் ஒரு எண்ணும், முன் பகுதியில் உள்ள நம்பர் பிளேட்டில் வேறு ஒரு எண்ணும் இருந்ததால் கோகுலின் நண்பர்கள் சந்தேகம் அடைந்தனர். அதனால், பேச்சு கொடுத்துக்கொண்டே அவர்களை பிடித்துவைக்க முடிவு செய்தனர் கோகுல் மற்றும் அவரது நண்பர்கள்.
உடனே காங்கேயம் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்ததால் காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து அந்த மூவரும் காவலாளார்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
காவலாளர்கள் அவர்கள் மூவரையும் பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்கள். அந்த விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்த ராஜா (53), சேலம் மாவட்டம் குகையை சேர்ந்த ராஜேந்திரன் (61), ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த பாபுபுருஷோத்தமன் (50) என்பது தெரியவந்தது.
இவர்களுக்கு ராஜா என்பவர்தான் தலைவராக இருப்பதும், இவர்கள் கொண்டு வந்த காரும், ராஜாவுக்கு சொந்தமானது என்பதும், அந்த காரில் உள்ள நம்பர் பிளேட் குளறுபடியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் மூவரும் திட்டமிட்டு பலபேரிடம் செல்போன்களில் பேசி, இவர்கள் வலையில் சிக்கும் நபர்களை ஏமாற்றி பணம் பறிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து தலா ஒரு கிராம் எடையுள்ள 2 காசுகளையும், காரையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் காங்கேயம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.