திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் போலீஸ் கெடுபிடி... 7 இடங்களில் மட்டுமே அன்னதானம்!

By vinoth kumarFirst Published Nov 10, 2018, 12:44 PM IST
Highlights

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவின் போது 7 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவின் போது 7 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 14ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.15 மணிக்குள், அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீப விழாவின், 6ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது. 

விழாவின் நிறைவாக, வரும் 23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். தீபத் திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ளப்படும் பணிகள், தேர் சீரமைப்பு பணி ஆகியவற்றை  அமைச்சர் பார்வையிட்டார்.

 

அதைத்தொடர்ந்து, சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது: கார்த்திகை தீபத் திருவிழாவை தரிசிக்க 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, 2,650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குறைந்த தூரம் செல்லும் வகையில் 500 பேருந்துகள் இயக்கப்படும். 16 இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நகருக்கு  வர வசதியாக 60 இலவச பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். 

மேலும்  பரணி தீப தரிசனத்துக்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீப தரிசனத்துக்கு 10 ஆயிரம் பக்தர்களும் இட வசதியின் அடிப்படையில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது கோயிலுக்குள் செல்போன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மலையில் சென்று நெய் காணிக்கை செலுத்த 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 7 இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

click me!