
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டனர். கொத்துக் குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம்,திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் மனசாட்சியின்றி குண்டுகளை வீசியது...
இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு போயினர். 21 ஆம் நூற்றாண்டின் துயரம் என அழைக்கப்படும் இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு...
ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் முற்பட்டனர். அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே யாரும் எதிர்பாராத நிகழ்வாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டனர்.