
கனிம சோதனைக்கான (Carbon Dating) ஆய்வகத்தை தமிழ்நாட்டிலேயே அமைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கடுமையாக சாடினார்.
திருமாவளவன் பேச்சு:
"திராவிடம் வேறு, தமிழ் வேறு என்று சிலர் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக எதிர்ப்பை தமிழ் தேசியம் எனக் கூறி ஒரு போலி அரசியலை செய்கிறார்கள். தமிழர்களின் தொன்மை கீழடி ஆய்வறிக்கையில் வெளிப்பட்டுள்ளது. கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.
அவர்கள் இத்தனை காலம் சொல்லி வந்தது பொய் என கீழடியில் தெரியவந்துள்ளது. இதை ஒன்றிய பாஜகவால் ஏற்க முடியவில்லை. உலகின் மூத்த இனங்களில் ஒன்றான தமிழர்களின் கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு உள்ளதை உள்ளபடியே வெளியிட வேண்டும்.
கனிம சோதனைக்கான (CARBON DATING) ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். இதற்கான செலவு ரூ.40-45 கோடிதான் ஆகும். ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளில் நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து கொண்டே இருப்போம். ஒன்றிய அரசின் தொல்லியல்துறை அதை ஏற்கும்போது ஏற்கட்டும்" என திருமாவளவன் பேசினார்.
மத்திய அரசின் நிலைப்பாடு:
கீழடி அகழாய்வின் முடிவுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும், அங்கீகாரம் வழங்குவதற்கு முன் அதிக நடைமுறைகள் உள்ளதாகவும், மேலும் பல சான்றுகள் தேவை என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னதாக தெரிவித்திருந்தார்.
அரசியல் குற்றச்சாட்டுகள்:
கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்கள் முடிந்து, அதன் ஆய்வு முடிவுகளை அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கை சமர்ப்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அதை ஏற்க மனமில்லாமல், எப்படியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக அரசு செயல்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.