ஸ்டாலினை திடீரென சந்தித்த திருமாவளவன்.! இது தான் காரணமா.?

Published : Feb 10, 2025, 02:30 PM IST
ஸ்டாலினை திடீரென சந்தித்த திருமாவளவன்.! இது தான் காரணமா.?

சுருக்கம்

விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகும் என பரவும் தகவல்களுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவன் சந்தித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விசிக

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த நேரமும் விலகிவிடும் என சமூகவலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இடம்பெற்றிருந்த ஆதவ் அர்ஜூன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜூன் திருமாவளவனை சந்தித்து பேசினார். இதனையடுத்து தான் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணையக்கூடும் என தகவல் பரவி வருகிறது.

ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்

இந்த  பரபரப்பான சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முதலமைசரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் அளித்தார். அதில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், நன்னிலம் திட்டம் எனத் தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தும் திட்டங்கள் சிறப்பான பலன்களைத் தந்துள்ளன. அந்தத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏதுவாகக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம்.

சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்

சாதி மற்றும் மத அடிப்படைவாத சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தின் விளைவாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அதைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகநீதி சக்திகளின் ஒருங்கிணைந்த பிரச்சாரமும், காவல்துறையின்  தீவிரமான நடவடிக்கையும் தேவை என்பதையே இது காட்டுகிறது. எனவே, சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமான உறுதிமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

வேங்கைவயல் வழக்கு - நீதிவிசாரணை ஆணையம் 

வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களையே குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது அம்மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பெரும் அதிர்ச்சிக்குள்ளான அக்கிராமத்து மக்கள்,குற்றப்பத்திரிக்கையைத் திரும்ப்ப் பெற வேண்டுமெனவும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் வலியுறுத்தி தங்களின் குடியிருப்புப் பகுதியிலேயே அமைதியான முறையில் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே, தற்போது சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்ற அறிக்கையை இறுதியாகக் கருதாமல், இது தொடர்பாக தீர விசாரித்து உண்மையைக் கண்டறிய ஏதுவாக, நீதிவிசாரணைக்கு ஆணையிட வேண்டுமாறு  கோருகிறோம். அதாவது, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற அல்லது  உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் "ஒரு நபர் விசாரணை ஆணையம்" ஒன்றை அமைக்குமாறு விசிக சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள திருமாவளவன், பட்டியல் சமூகப் பிரிவினருக்குப் பதவிஉயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஓயாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...