கருணாநிதியின் பூர்வீக வீட்டின் முன்பு கூடிய திருக்குவளை மக்கள்; இரண்டு நாள் அங்கேயே இருந்து அஞ்சலி...

First Published Aug 9, 2018, 1:38 PM IST
Highlights

கருணாநிதி மறைந்தார் என்ற செய்தியை கேட்ட அவரின் சொந்த ஊரான திருக்குவளை மக்கள் அவரின் பூர்வீக வீட்டின் முன்பு கூடினர். அங்கு இரண்டு நாள்களாக ஒப்பாரி வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மாலை 6.110 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினார். பின்னர், அவரின் உடல் கோபாலபுரம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இராஜாஜி அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து மெரினாவுக்கு கொண்டு சென்று அறிஞர் அண்ணாவின் பக்கத்தில் தம்பி கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்டார். கருணாநிதி இறந்த செய்தி வெளியிடப்பட்டதில் இருந்து மெரினாவில் அடக்கம் செய்யப்படும் வரை மொத்த தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது.

தமிழ்நாடே சோகத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் கருணாநிதி பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமம் எப்படி இருந்தது? தெரிஞ்சுக்க தொடர்ந்து வாசிங்க....

திருக்குவளையில் பார்க்கும் இடமெல்லாம் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், கூட்டம் கூட்டமாக நின்று பெண்கள் ஓயாமல் ஒப்பாரி, ஊரே மயான அமைதியாக இருந்தது. இப்படி மண்ணின் மைந்தன் கருணாநிதியின் இறப்பு திருக்குவளை மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இறந்த செய்தி பரவ ஆரம்பித்ததில் இருந்து கருணாநிதியின் பூர்வீக இல்லத்தை நோக்கி மக்கள் படை திரண்டுக் கொண்டே இருந்தது. அங்கு வீட்டின் முன்பு கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டி இருந்தது. திருக்குவளை மட்டுமின்றி மற்ற ஊரில் இருந்து வந்தவர்களும் வீட்டின் முன்பு கூடி கதறி அழுதனர்.

கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெண்கள் ஒப்பாரி பாடினர். ஊரில் இருந்த மக்கள் அனைவரும் கருணாநிதியின் வீட்டின் முன்பு கூடியிருந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை முதல் நேற்று கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யும் வரை மக்கள் கூட்டம் குறையவில்லை. 

தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி வீட்டின் முன்பு மொட்டை அடித்துக் கொண்டனர். கருணாநிதி புகழ் வாழ்க! ஓங்குக! என்று முழக்கமிட்டு விண்ணகத்திற்கு தங்கள் தலைவை பிரியா விடை கொடுத்தனுப்பினர். பின்னர், நேற்று மாலை மௌன ஊர்வலத்திலும் மக்கள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர். கருணாநிதியின் வீட்டின் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் திருக்குவளையின் வீதிகளை சுற்றிவிட்டு மீண்டும் கருணாநிதியின் வீட்டின் முன்பே முடிந்தது.

இப்படி, மண்ணின் மைந்தன் கருணாநிதியின் இறப்பில் திருக்குவளை மக்கள் கண்ணீர் பெருக கூடி அஞ்சலி செலுத்தினர்.

click me!