கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த திருடன் கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியின் மனைவியிடம் 5 சவரன் தாலி சங்கில் மற்றும் கம்மலை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டான்.
கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரம் ரூபா நகரில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (35). இவருடைய மனைவி பிரிஸ்கில்லா (32). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் ராம்குமார் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கடையில் திடீரென்று முட்டை தீர்ந்துவிட்டது. எனவே, அவர் தனது மனைவி பிரிஸ்கில்லாவை வியாபாரத்தை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, முட்டை வாங்கச் சென்றார்.
பிரிஸ்கில்லா கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிஇருந்தார். அப்போது மதியம் 2 மணியளவில் அந்த கடையில் யாரும் இல்லாதபோது 30 வயது மதிப்புள்ள ஒருவர் கடைக்கு வந்தார்.
அவர் பிரிஸ்கில்லாவிடம் குளிர்பானம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அவரும் குளிர்பானத்தை கொடுத்ததும், அந்த நபர் அதை வாங்கி குடித்தார். பிறகு அவர் திடீரென கடைக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பிரிஸ்கில்லா அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலி மற்றும் ஒரு ஜோடி கம்மல் ஆகியவற்றை பறித்தார்.
அவர் கடையைவிட்டுச் சென்றதும் பிரிஸ்கில்லா திருடன், திருடன் என்று கத்தினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து திருடனை தேடி பார்த்தனர். ஆனால், அதற்குள் அந்த திருடன் தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காவலாளர்கள் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் அந்த திருடனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த அந்த திருடனை பிடிக்க காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.