நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஊராட்சியை கலைக்க வேண்டும்.?முதலமைச்சர் அலுவலகத்தில் புகார்.!அதிர்ச்சியில் அதிகாரிகள்

By Ajmal KhanFirst Published May 20, 2022, 3:17 PM IST
Highlights

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத பாம்பன் ஊராட்சியை  கலைக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் நபிஷா பானு(55) இவருக்கு சொந்தமான நிலம் பாம்பன்  மார்க்கெட் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை மதிமுக மாவட்ட செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பேட்ரிக் உள்ளிட்ட நான்கு பேர் ஆக்கிரமித்துள்ளனர்.  இதனை மீட்டுத் தரும்படி நபிஷா பானு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.  இந்த உத்தரவு பிறப்பித்து 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை நபிஷா பானு புகார் மனு அளித்துள்ளார்.  கடந்த 7 ஆண்டுகளில் 4 க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் மனுவும் அளித்துள்ளார். 

முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் 

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பிடிஓ மற்றும் ராமேஸ்வரம் தாசில்தாருக்கு கடிதம் மட்டுமே கடந்த எட்டு வருடங்களாக சென்று கொண்டு உள்ளது.  ஆனால் நீதிமன்ற உத்தரவு  மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலைதான் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் தனது  நிலத்தை மீட்டு தரக்கோரி  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதனை செயல்படுத்தாத பாம்பன் பஞ்சாயத்தை கலைக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் தற்போது புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளதாக நபிஷா பானு தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நபிஷா பானு,  தனது சேமிப்பில் வாங்கிய இடத்தில் முன்னாள்  ஊராட்சி மன்ற தலைவரும், இன்னாள் ஊராட்சி மன்ற தலைவியின் கணவருமான பேட்ரிக் உள்ளிட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதே போல தனது இடத்தில் மேலும் 3 பேர் கடைகள் வைத்துள்ளதாக தெரிவித்தார்.  நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்றதாகவும் கூறியுள்ளார், மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாக தெரிவித்தார். இருந்த போதும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

மேல்முறையீடு செய்ய உத்தரவு

நீதிமன்ற உத்தரவை ஏற்று கொள்ளாத மாவட்ட ஆட்சியர், பாம்பன் ஊராட்சி மன்ற தலைவரை மேல் முறையீடு செய்யும்படி உத்தரவிட்டதாக தெரிவித்தார். பாம்பன் கடை பகுதியில் உள்ள நிலத்தை பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் இன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தான் ஆக்கிரமித்துள்ளார்.  நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக இருக்க கூடிய நபர், இந்த நிலம் தொடர்பான வழக்கில் எப்படி அவர் மேல் முறையீடு செய்வார் என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே தான் தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தீர்வு ஏற்படுத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் புகார் தெரிவித்துள்ளதாக கூறினார். 

click me!