சத்தமில்லாமல் அனுமதி வழங்கிய மத்திய அரசு! தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி

By vinoth kumarFirst Published Oct 2, 2018, 10:27 AM IST
Highlights

தமிழகத்தில் வேதாந்தா குழுமம் 2 இடங்களிலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஒரு இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேதாந்தா குழுமம் 2 இடங்களிலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ஒரு இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இவற்றுடன் சேர்த்து நாட்டில் 41 இடங்களில் வேதாந்தா குழுமத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. மேலும், ஓஎன்ஜிசிக்கு 2 இடங்கள், இந்திய ஆயில் நிறுவனத்துக்கு 9 இடஙஅகள், கெயில் இந்தியா, பாரத் பெட்ரோலியம், ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடுமுழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையொப்பமானது. இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வாலிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்கினார். ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும் மொத்தப்பரப்பளவு 59,282 சதுர கி.மீ. இதில் 75 சதவீத ஒப்பந்தங்களை வேதாந்தா குழுமம் பெற்றுள்ளது. அதாவது 55 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா குழுமம் பெற்றுள்ளது. 

தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும் என்ற விவரங்களை மத்திய அரசு வெளியாடாமல் ரகசியமாகவே வைத்துள்ளது. இருப்பினும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், வேதாந்தா குழுமத்துக்கு நாகை மாவட்டத்தில் காவிரி கடலில் கலக்கும் இடத்தில் இரு இடங்களிலும் ஒதுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான  பணிகளை மத்திய அரசு திட்டமிட்டு முன்பு தொடங்கியது. 

ஆனால், பொதுமக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 3 இடங்களில் கையொப்பமாகியுள்ளது. இதில் தமிழகத்தில் வேதாந்தா குழுமத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் முறையே 1,794 சதுர கி.மீ, 2,574 சதுர.கி.மீ பரப்பும், ஒஎன்ஜிசிக்கு 731 சதுர கி.மீ பரப்பும் ஆகும்.

click me!