கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவர்கள் அலட்சியம்; வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தை இறப்பு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 28, 2018, 9:15 AM IST
Highlights

கடலூரில், அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக நடந்துக் கொண்டனர். இதனால், குழந்தை இறந்துப் பிறந்தது. இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

கடலூர் 

கடலூரில், அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக நடந்துக் கொண்டனர். இதனால், குழந்தை இறந்துப் பிறந்தது. இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம், தாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். விவசாயியான இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. 

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வெண்ணிலாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். 

அங்கு, வெண்ணிலாவுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் குழந்தை இறந்துப் பிறந்தது. இந்தத் தகவலை குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்து குழந்தையின் உடலை குடும்பத்தினரிடம் கொடுத்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

குழந்தை இறந்துப் பிறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி வெண்ணிலாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களைக் கண்டித்தும், மருத்துவமனையை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். 

அப்போது, பச்சிளம் குழந்தையின் உடலைக் கையில் வைத்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் உட்கார்ந்து கதறி அழுதனர். போராட்டம் குறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

வெண்ணிலாவின் குடும்பத்தினர், காவலாளர்களிடம், "வெண்ணிலாவை பிரசவத்திற்காக காலை 8 மணிக்கு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தோம். அதன்பின்னர் மருத்துவர்கள் வெண்ணிலாவை ஒரேயொரு முறை மட்டுமே வந்து பார்த்தனர். 

உரிய நேரத்தில், உரிய முறையில் வெண்ணிலாவுக்கு எந்தவித மருத்துவப் பரிசோதனையும் செய்யப்படவில்லை. சிகிச்சையும் தரப்படைவில்லை. மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை இறந்துப் பிறந்தது. எனவே, அலட்சியமாக நடந்துகொண்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தினர்.

அதற்கு காவலாளர்கள், "இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம்" என்று உறுதியளித்தனர். இதனையேற்றுக் கொண்ட வெண்ணிலாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். 

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக நடந்துக் கொண்டதால் குழந்தை இறந்துப் பிறந்தது என்ற தகவல் மருத்துவமனை முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!