
கடந்த மூன்று நாள்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பெரும் மழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 302 கன அடிக்கு உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் மூலமாகதான் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்றுப்பாசனம் மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் இந்த அணையை நீர் ஆதாரமாகக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுகிறது.
இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலவி வந்த வறட்சியால் அமராவதி அணைக்கு தண்ணீர் வழங்கக்கூடிய சிற்றாறுகளில் வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் முற்றிலும் நின்று போனது. இதனால் அமராவதி அணையை நீர் ஆதாரமாக கொண்டு செயல்பட்டுகின்ற கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் கடும் வறட்சியால் வனப்பகுதி முற்றிலுமாக வறண்டு விட்டது. இதனால், வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருவதால் வனவிலங்குகள் குடிநீருக்காக சமவெளி பகுதிக்கு வருவது குறைந்துள்ளது.
மேலும் வனப்பகுதிகளில் உள்ள சிற்றாறுகள் மூலமாக அமராவதி அணைக்கு கடந்த இரண்டு நாள்களாக நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு 16 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 302 கன அடியாக உயர்ந்தது.
மழையின் காரணமாக அமராவதி அணைப்பகுதியில் வெப்பம் தணிந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.