வீடு புகுந்து பெண்ணை மயக்க வரும் அளவுக்கு சரமாரியாக தாக்கிய திருடன் - ரூ.25 ஆயிரம் கொள்ளை...

Mar 8, 2018, 10:40 AM IST



அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து பெண்ணை மயக்க வரும் அளவுக்கு சரமாரியாக தாக்கிவிட்டு பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற இளைஞரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில். ஜமாத்தில் கணக்கராக உள்ளார். இவரது மனைவி சர்மிளா (28) நேற்று பகலில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

அப்போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இஸ்மாயிலின் தந்தையை பார்க்க வேண்டும் என்று வீட்டுக்கு வந்துள்ளார். அவரை தர்காவில் சென்று பார்க்குமாறு சர்மிளா கூறியுள்ளார்.

அப்போது குடிக்க தண்ணீர் கேட்ட அந்த நபர் திடீரென்று சர்மிளாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதியுள்ளார். இதில் சர்மிளா அங்கேயே மயக்கம் அடைந்தார். பின்னர், அந்த நபர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டார். 

சிறிது நேரத்துக்கு பிறகு வீட்டுக்கு வந்தவர்கள் மயங்கிக் கிடந்த சர்மிளாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து நகர காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன் வழக்குப்பதிந்து கொள்ளையனை தீவிரமாக தேடி வருகிறார்.