
கடலூர்
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட போகின்றனர் என்ற தகவல் கிடைத்ததால் இரண்டு நாள்களாக கல்லூரி வாசல் முன்பு பலத்த காவல் பாதுகாப்புடன் காவலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். ஆனால், மாணவர்கள் யாரும் போராட்டம் நடத்தாமல் கல்லூரிக்கு சென்று வகுப்புகளை கவனித்தனர்.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கட்டண உயர்வை கண்டித்து நேற்று தொடர்ந்து 3-வது நாளாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக நேற்று முன்தினமே தகவல் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தேவனாம்பட்டினம் காவலாளார்கள் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாணவர்கள் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கல்லூரியும் வழக்கம் போல செயல்பட்டது.
இந்த நிலையில், நேற்றும் இவர்கள் போராட்டதை தொடங்க இருப்பதாக காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் தொடர்ந்து 2-வது நாளாக கல்லூரியில் காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கல்லூரியில் மாணவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடாமல், வகுப்புகளுக்குச் சென்றனர். தொடர்ந்து கல்லூரி காவல் பாதுகாப்புடனே இயங்கியது.
மாணவர்கள் போராட்டம் நடத்திவிடுவார்களோ என்ற அச்சத்திலும், பாதுகாப்பு கருதியும் காவலாளர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தது அந்தப் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்று, கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 13-ல் உள்ள ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், "தமிழக அரசு அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், இந்த கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்" என்றும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் சிறிது நேரம் கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.