100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசு உத்தரவினை திரும்ப பெற வேண்டி போராட்டம்... 

First Published Apr 13, 2018, 11:31 AM IST
Highlights
The struggle to get back the Central Government order to disrupt 100-day work plan


விருதுநகர்
 
100 நாள் வேலை திட்டத்தை சீர் குலைக்க முயற்சிக்கும் மத்திய அரசு உத்தரவினை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  பின்னர் அந்தப் போராட்டம் நடத்தியவர்கள் மனு ஒன்றை கொடுத்தனர். 

அந்த மனுவில், "கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா அரசு இத்திட்டத்தினை முடக்கிட முயற்சி செய்தது. 

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடை பாதியாக குறைத்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியிலும் மிக குறைந்த நாட்கள் வேலையும், குறைந்த கூலியும், தாமதமான கூலி பட்டுவாடாவும் செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த அக்டோபர் மாதம் 100 நாள் வேலை திட்டத்தை ஏறக்குறைய முழுமையாக ரத்து செய்யும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது கிராமப்புற ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முழுமையாக வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தை சீர் குலைக்க முயற்சிக்கும் மத்திய அரசு உத்தரவினை திரும்ப பெற வேண்டும். 

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சிக்கான 150 நாள் வேலை வழங்கிட வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையாக வேலை மற்றும் கூலி கிடைக்க வேண்டும். இத்திட்டத்தை முறையாக மீண்டும் அமல்படுத்த வேண்டும்" என்று அவர்கள் கூறியிருந்தனர்.

click me!