
கேரளாவில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இம்மாதம் 30-ந்தேதிக்கு முன்பாகவே தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது வழக்கத்துக்கு மாறாக, ஒரு நாள் முன்பே பருவமழை தொடங்கும் எனத் தெரிகிறது.
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறி முதலில் அந்தமான் தீவுகள் கடலில் தான் தொடங்கும். அந்தமான் தீவுகளிலும் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கி, இலங்கையின் தென் கிழக்கு பகுதியை ஒட்டி மேகக்கூட்டம் வந்துவிட்டதாக செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அந்தமானில் முன்கூட்டியே தொடங்கியதைப் போல கேரளாவிலும் தென் மேற்கு பருவமழை இம்மாதம் 30-ந்தேதிக்கு முன்பாகவே தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ராஜீவன் இது குறித்து கூறுகையில், “ பருவமழை குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே, இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது இம்மாதம் 30-ந்தேதியே தொடங்கும், கேரளாவில் ஒரு நாள் முன்கூட்டியை பருவமழை தொடங்கும்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நீர் வெப்பமடைவதாலும், எல்நினோ விளைவுகள் தொடர்வதாலும், இந்த ஆண்டு பருவமழை இயல்பு நிலையிலையே இருக்கும். இந்த பருவகாலத்தில் மேக்கூட்டங்கள் கூடியவுடன் செயற்கையாக மழை பெய்வதற்கான ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. இதற்காக 2 பிரத்யேக விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு விமானம் செயற்கை மழை பெய்வதற்கான பொருட்களை மேகங்களில் தூவவும், மற்றொரு விமானம் ஆய்வுக்கு மாதிரிகளை சேகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியை ஆய்வுக்கு தேர்வு செய்துள்ளோம் ’’ எனத் தெரிவித்தார்.