
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், திருபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு இரண்டாவது நாளாக ஜமாபந்தி நேற்று நடைபெற்றது.
இதில், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட முன்னங்குளம், முருங்கை, சிறுதாமூர், மதூர், பின்னம்பூண்டி, விளாங்காடு, ராவுத்தநல்லூர் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
அப்போது, புதிய குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் தீர்வாய அலுவலர் பி.பரமசிவத்திடம் 128 மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில், ஒரு மனுவுக்கு அங்கேயே உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்றவை துறை ரீதியான நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் கற்பகம், வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி, துணை வட்டாட்சியர்கள் துரைராஜ், பிரகாஷ், தனி வட்டாட்சியர் வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோன்று திருபெரும்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட படப்பை, செரப்பணஞ்சேரி, மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம், வல்லம், தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கி இரண்டாம் நாளான நேற்றும் தொடர்ந்தது.
செரப்பனஞ்சேரி குறுவட்டத்துக்கு நடைபெற்ற ஜமாபந்தியில் செரப்பனஞ்சேரி, ஆரம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று 121 மனுக்களை கொடுத்தன. அவற்றில், 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.