
நெய்வேலி அருகே ரயில் சோதனை ஓட்டத்திற்காக ஒரு மணி நேரம் கேட்டை மூடி வெயிலில் நிற்க வைத்ததால் கேட் கீப்பரை அடித்து உதைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி நகரத்துக்கும், மந்தாரக்குப்பத்துக்கும் இடையே வடக்கு வெள்ளூரில் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. கடலூர்-விருத்தாசலம் இடையே தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது மட்டும், குறிப்பிட்ட நேரத்தில் வடக்கு வெள்ளூரில் கேட் மூடப்படும்.
இந்நிலையில் மதியம் 1.30 மணி அளவில் வடக்குவெள்ளூர் ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டது. இதனால் சாலையில் இருபுறமும் பொதுமக்கள் வாகனத்துடன் காத்திருந்தனர்.
ஒரு மணி நேரம் ஆகியும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எதற்காக ரெயில்வே கேட் மூடி வைத்துள்ளர்கள் என்று கேட் கீப்பரான கபூர் மீனாவிடம் கேட்டனர்.
திருச்சி கோட்ட ரெயில் தண்டவாள பாதுகாப்பு அதிகாரி டிராலி மூலம் ஆய்வு செய்து வருவதாகவும், அதற்காக மூடியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆய்வுக்காக ஒரு மணி நேரம் ரெயில்வே கேட்டை மூடுவதா? என பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கி கேட்டை திறந்தனர்.
அந்த சமயத்தில் விருத்தாசலம் மார்க்கத்தில் இருந்து டிராலியில் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான ஒரு குழுவினர் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்ததும் பொதுமக்கள், டிராலியை வழிமறித்து அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சாலையின் இருபுறமும் நின்ற வாகனங்கள் முதலில் சென்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.