
தஞ்சாவூர்
ஓய்வூதிய திட்டத்தில் புதிய பணியாளர்கள் 70 ஆயிரம் பேரை இணைத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டல ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வூதியர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அப்பாதுரை, பொருளாளர் பாலசுப்பிரமணியன், கவுரவ தலைவர் மல்லி.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், "அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்கள் 65 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு தொடர் போராட்டம் காரணமாக தற்போது அரசிடம் நிதி பெற்ற முதல் வாரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட அரசு நியமித்த குழு சமர்ப்பித்த முடிவின் அடிப்படையில் போக்குவரத்து டிரஸ்ட் சார்பில் வழங்கும் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.
இந்த ஓய்வூதிய திட்டத்தில் தற்போது பணியில் சேர்ந்துள்ள புதிய பணியாளர்கள் 70 ஆயிரம் பேரை இணைப்பது என்ற அறிவிப்பையும் வருகிற சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி இன்று தஞ்சை புறநகர் கோட்ட அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் தற்காலிக பணிநீக்கம் செய்தது, இடமாற்றம், பணி வழங்க மறுப்பது, பணி நிரந்தரத்தை தள்ளி போடுவது உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கும்பகோணம் கோட்ட நிர்வாகம் கைவிடுவதோடு, அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி தொழில் அமைதி காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூல் செய்வதை வன்மையாக கண்டிப்பதுடன், இலவசமாக வாகனம் நிறுத்த உத்தரவிட வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.