சிவகங்கை
சிவகங்கையில், குடிபோதையில் லாரி ஓட்டிவந்தவர் அதிபயங்கரமாக மோதியதில் சாலை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இரயில்வே காலனியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவர் சாலை பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலூர் வரை நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று, தமிழ்ச்செல்வம் மீது அதிபயங்கரமாக மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவர் சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த குன்றக்குடி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் லாரி ஓட்டுநர் சகுபர் சாதிக் என்பவர் குடித்துவிட்டு போதையில் லாரியை ஓட்டிச் சென்றதும், சாலைப் பணியாளர் தமிழ்ச்செல்வத்தின் மீது மோதியதும் தெரியவந்தது.
இதனையடுத்து சகுபர் சாதிக்கை காவலாளர்கள் கைதுசெய்தனர். இதனிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழ்ச்செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.