
புதிய காற்றழுந்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தற்போது நெல்லை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தெற்கு அந்தமானில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த சில நாட்களில் தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் நல்ல மழை பெய்ய கூடிய சூழல் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னை நகரில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நெல்லை மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை குறைந்த நிலையில் இன்று மீண்டும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.