
வழக்கறிஞர் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் இருப்பதாக வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.
சென்னையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன் கிருஷ்ணன், வழக்கு ஒன்றுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சில கருத்துக்களை முன்வைத்தார்.
அவரது கருத்துகளில் முக்கியமானவையாகப் பார்க்கப்பட்டவை... கல்லூரிக்கே செல்லாமல் சிலர் வழக்கறிஞர் ஆவதால், கட்டப் பஞ்சாயத்து அதிகமாகி விட்டது. இந்தக் கட்டப் பஞ்சாயத்து செயல்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், வழக்கறிஞர் தொழிலை யாராலும் காப்பாற்ற முடியாது. நாமே காப்பாற்ற முடியாவிட்டால் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபடும் சங்கம் இப்பிரச்னையையும் முன்னெடுக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழக்கறிஞர் தொழில் மீதான புனிதத்தை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும். கல்லூரிக்கே செல்லாமல் தொலைதூரக் கல்வி மூலம் வேறு மாநிலங்களில் சட்டம் படிப்பவர்களால் தான் இந்த வழக்கறிஞர் தொழில் மீதான புனிதம் கெட்டுப்போகிறது.
தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய வேண்டாம். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள், காவல் துறைக்கு எதிராக மட்டுமே போராடாதீர்கள். போலீசாருக்கு எதிராக மட்டும் போராடுவதை விட்டுவிட்டு, வழக்கறிஞர்கள் தொழிலையும் சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள் என கருத்து தெரிவித்தார்.
நீதிபதி கிருபாகரன், அதிரடியாகக் கருத்துகளை முன்வைப்பவர். அண்மையில் தொலை நிலைக் கல்விமூலம் பட்டம் பயின்று வழக்கறிஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு பெற்றவர்களை நீக்கும் படி அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.
மேலும், வருங்காலத்தில் இணையதளத்தில் பார் கவுன்சிலில் பதிவு பெற்ற அனைத்து வழக்கறிஞர்கள் குறித்த முழு விவரத்தையும் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றனர். இதன் மூலம், போலி வழக்கறிஞர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறும் என்று நம்பப் படுகிறது. இந்த வகையில், நீதித்துறையை தூய்மைப் படுத்தும், தூய்மை நீதித்துறை இயக்கத்துக்கான பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.