மீண்டும் 22 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம் -அதிர்ச்சியில் மீனவர்கள் குடும்பத்தினர்

By Ajmal KhanFirst Published Mar 10, 2024, 7:47 AM IST
Highlights

இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்கரையில் கட்டப்பட்டு வீணடித்து வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாகவும், இதன் காரணமாக மீன் வளம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி இலங்கையில் மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

Latest Videos

இலங்கையில் புதிய சட்டம்

இதனையடுத்து முதல் முறையாக இலங்கை கடற்படையில் சிக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர். இரண்டாவது முறையாக சிக்குபவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், 3வது முறையாக சிக்குபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 தமிழக மீனவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

22 மீனவர்கள் கைது 

இந்த சூழ்நிலையில் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் மொத்தமாக 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

சென்னை அண்ணாநகரில் 4 ஞாயிற்றுகிழமைகளில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம் தெரியுமா?

click me!