
தர்மபுரி
தருமபுரியில் உள்ள வனப்பகுதியில் பெண் யானை ஒன்று பரிதாபமாக இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி வனப்பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று மர்மான முறையில் இறந்து கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட வன அலுவலர் திருமால், உதவி வன அலுவலர் பிரியதர்ஷினி, கால்நடை மருத்துவர் பிரகாஷ், ஒகேனக்கல் வனச்சரகர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
பின்னர் அவர்கள் இறந்த யானையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து யானைக்கு அதே பகுதியில் உடற்கூராய்வு நடத்தப்பட்டு, பின்னர் யானையின் உடல் அதே இடத்திலேயே அடக்கமும் செய்யப்பட்டது.
நோய்த்தொற்று மற்றும் இரத்த போக்கு காரணமாக இந்த பெண் யானை இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது.
மேலும், இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.