
தர்மபுரி
இன்று தொடங்கும் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வில், தர்மபுரி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 605 மாணவ, மாணவிகள் எழுத இருக்கின்றனர்.
பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வை 92 அரசு பள்ளிகள், 43 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகளைச் சேர்ந்த 11,287 மாணவர்களும், 10,661 மாணவிகளும் எழுதுகிறார்கள்.
இதேபோல் தனித்தேர்வர்களாக 657 பேர் எழுதுகிறார்கள். மாவட்டம் முழுவதும் இந்த தேர்வை மொத்தம் 22,605 மாணவ, மாணவிகள் எழுத தயாராக இருக்கிறார்கள்.
இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 57 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை அதிகாரிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் சொல்வதை கேட்டு எழுதுவதற்கு ஆசிரியர்கள் என பிளஸ்–2 தேர்வு நடத்தும் பணியில் மொத்தம் 1531 பேர் ஈடுபடுகிறார்கள்.
10 வினாத்தாள் காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வின்போது முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை குழுக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.