சிவகங்கை
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்படுவது வேதனை அளிப்பதாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சித்துறை மாநிலச் செயலாளர் முத்துராமன் (60). தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் உள்ள இவரது வீட்டில் கடந்த 8-ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்தனர் என்றும், இதில் முத்துராமன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்றும் சொல்றாங்க.
இந்தச் சம்பவம் குறித்து தேவகோட்டை நகர காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தேவகோட்டையில் உள்ள முத்துராமன் வீட்டிற்கு வந்தார். சம்பவம் நடந்தப் பகுதிகளை பார்வையிட்ட பின்னர் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து முத்துராமனிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அதில், “பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது வேதனை தரும் செயலாக உள்ளது.
தேவகோட்டை பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி முத்துராமனின் வீட்டில் 6 பெட்ரோல் குண்டுகளை வெடிக்கச் செய்து அவரை படுகொலை செய்ய மர்ம நபர் முயற்சி செய்துள்ளனர். அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டிருந்தது தான் இந்த சம்பவம் ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது என நினைக்கின்றேன்.
இதேபோல் சிவகங்கை மாவட்ட தலைவர் ராஜேந்திரனுக்கும் காவல் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது காவலாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின் போது சிவகங்கை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேந்திரன் உடனிருந்தார்.
பாஜக நிர்வாகிகள் தாக்கபப்டுவதும், ஏன் கொலை செய்யப்படுவதும் தமிழகத்தில் நடக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதேபோன்று அந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதும் உண்மையே. பழைய கதைகளை ஆராய்ந்தால் அனைத்தும் விளங்கும்.